சென்னை: சிங்கப்பூர், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4.7 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து கடந்த சில நாள்களாக விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தடைந்த பயணிகள் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போது இரண்டு பெண் பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்களுடைய உடைமைகளைச் சோதனையிட்டபோது ஏதும் சிக்கவில்லை.
இதையடுத்து இருவரும் தனிஅறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதனையிடப்பட்டனர். அப்போது இருவரும் ரூ.37 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்தது அம்பலமானது.
இதேபோல் இலங்கையில் இருந்து சென்னை வந்தடைந்த இரு பெண்களும் ரூ.55 லட்சம் மதிப்புள்ள 1,042 கிராம் தங்கத்தை கடத்தி வந்து சிக்கினர். இவர்களும் உள்ளாடைக்குள்தான் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியுள்ளனர்.
துபாயில் இருந்து சென்னை வந்த இளையர் 745 கிராம் தங்கமும் மற்றொரு விமானத்தில் வந்த இரு ஆடவர்கள் 2.3 கிலோ தங்கமும் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.