சென்னை: தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் இனி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் டிசம்பர் 10ஆம் தேதி வெளியிட்டார்.
இது தொடர்பாக அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி கோரிக்கை விடுத்திருந்ததாகவும் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர், அதற்கு உரிய விளக்கம் கொடுத்திருப்பதாகவும் முதல்வர் பேரவையில் குறிப்பிட்டார்.
“உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள உறுப்பினர் கே.பி.முனுசாமி, முதல்வர் இதைப் பரிசீலித்து உரிய அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
“அவரது கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது,” என்று முதல்வர் தெரிவித்தபோது அனைத்துப் பேரவை உறுப்பினர்களும் அதைக் கைதட்டி வரவேற்றனர்.

