பொங்கல் விடுமுறையில் யுஜிசி நெட் தேர்வு; வேறு தேதிக்கு மாற்றும்படி வலியுறுத்து

2 mins read
b24b25d7-159e-47fb-8a19-47c8e3bea4b2
தமிழ் நாட்டு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழ் நாட்டில் பொங்கல் விழாவுக்காக தமிழக அரசு ஏற்கெனவே ஜனவரி 13 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை விடுமுறை நாள்களாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை (என்டிஏ) யுஜிசி நெட் தகுதித்தேர்வை ஜனவரி 3 முதல் 16ஆம் தேதி வரை நடத்துவதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழ் நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், யுஜிசி நெட் தேர்வுகளைப் பொங்கல் விடுமுறையில் நடத்தாமல் வேறு தேதிகளுக்கு மாற்றிவைக்கும்படி மத்திய கல்வித்துறைக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

அதில், “ஜனவரி 13ஆம் தேதி போகிப் பண்டிகையும், 14ஆம் தேதி பொங்கல் (தமிழ்ப் புத்தாண்டு) திருநாளும், ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினமாகவும் (மாட்டுப் பொங்கல்), ஜனவரி 16ஆம் தேதி உழவர் திருநாள் மற்றும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது.

“தமிழ் நாட்டு விவசாயிகளின் உணர்வார்ந்த திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் ஒரு திருவிழா மட்டுமல்ல, மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் அடையாளமாகும்.

“பொங்கல் திருநாளைப் போலவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மகர சங்கராந்தி விழா ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

”பொங்கல் விடுமுறை நாள்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டால், மாணவர்கள் இத்தேர்வுக்குத் தயாராவதற்கும் எழுதுவதற்கும் தடை ஏற்படும். ஏற்கெனவே, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விடுத்த வேண்டுகோளின்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி மாத பட்டயக் கணக்காளர் (சிஏ) தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

”எனவே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்த்திடும் வகையில் பொங்கல் திருநாள் விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி - நெட் தேர்வு மற்றும் பிற தேர்வுகளை வேறு தேதிகளில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்