சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் நடப்புக்கு வந்ததிலிருந்து பறக்கும் படையினர் தொடர்ந்து அதிரடிச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 18) மாலை நிலவரப்படி, கணக்கில் வராத ரூ.42.65 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் செலவினக் கண்காணிப்பு, அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின்கீழ் அதிகாரிகள் கணிசமான அளவு பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனர். மார்ச் 18ஆம் தேதி நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு 42.65 கோடி என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விவரங்கள்:
[ο]ரொக்கம்: ரூ.2.37 கோடி
[ο]மதுபானம்: ரூ.0.18 கோடி
[ο]போதைப்பொருள்: ரூ.2.88 கோடி
[ο]விலைமதிப்பற்ற உலோகங்கள்: ரூ.16.42 கோடி
[ο]இலவசங்கள்/பிற பொருள்கள்: ரூ.20.80 கோடி
தொடர்புடைய செய்திகள்
தேர்தல் கண்காணிப்பில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களைக் கவர வழங்கப்படும் இலவசப் பொருள்கள், தடைசெய்யப்பட்ட ஏனைய பொருள்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அறிக்கை சுட்டியது.
கண்காணிப்புப் பணியில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட துறைகள் ஈடுபட்டுள்ளன.
தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்குத் தலா ஒன்பது பறக்கும் படைகள், ஒன்பது நிலை கண்காணிப்புக் குழுவினர் என்ற விகிதத்தில் தமிழகம் முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலை கண்காணிப்புக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருவாட்டி அர்ச்சனா சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
தேர்தல் நடத்தை விதிகள், அனைத்து தரப்பினராலும் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்று மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் ரொக்கத்தை எடுத்து செல்லும்பொழுது அவை எப்படி பெறப்பட்டன, எதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது என்பதற்கான ஆவணங்கள் அல்லது அதற்கான காரணங்களை எழுத்து மூலம் சமர்ப்பித்தால் அத்தொகை உடனடியாக உரியவரிடம் திரும்ப வழங்கப்படும், பறிமுதல் செய்யப்படமாட்டாது என்றும் அவர் கூறினார்.

