சென்னை: மகாராஷ்டிராவில் இந்தித் திணிப்புக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், அந்த மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிராவில் மராத்தி மட்டுமே கட்டாய மொழி என்று பேட்டி கொடுத்துள்ளார்.
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதற்கு எதிராக, மிகப் பரவலாக மக்கள் தமது கண்டனங்களை தெரிவித்ததன் விளைவாக உருவான நடுக்கத்தின் வெளிப்பாடுதான் அவரது இந்த நேர்காணல் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திரு ஸ்டாலின் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமரும், மத்திய கல்வி அமைச்சரும் பின்வருவனவற்றை தெளிவுபடுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின்கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தியை தவிர வேறு எந்த மூன்றாவது மொழியும் கட்டாயமல்ல எனும் தேவேந்திர பட்னாவிஸ் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்கிறதா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழியை பயிற்றுவிப்பது கட்டாயமல்ல என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் மகாராஷ்டிராவில் அறிவித்ததைப் போல், தெளிவான வழிகாட்டுதலை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குமா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக அநியாயமாக தமிழகத்துக்குத் தராமல் நிறுத்தி வைத்திருக்கும் ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா என்று முதல்வர் ஸ்டாலின் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.