சென்னை: மதுரை மாவட்டத்தின் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாபட்டியில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துஸ்தான் ஜிங் நிறுவனம் தூத்துக்குடி சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனம் என்று கூறி அப்பகுதி மக்கள் சுரங்கம் அமைக்கக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து அந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றன.
இந்நிலையில், மதுரை அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு அனுமதி அளித்துள்ள குறிப்பிட்ட பகுதி எது, எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஆராய்ந்து வருகிறோம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.