சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, மணிகண்டன், சந்தோஷ் ஆகியோர் தங்களுக்கு பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சி.குமரப்பன் முன்னிலையில் நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் எம்.ஸ்ரீதர், “மனுதாரர்கள் 700 நாள்களுக்குமேல் சிறையில் உள்ளனர்.
“குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
“ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் சிபிஐ விசாரணை தொடர்பாக அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை” என்றார்.
காவல்துறை தரப்பில் முன்னிலையான அரசு வழக்கறிஞர் கணேஷ்குமார், “சாட்சிகள் மிரட்டப்பட வாய்ப்புள்ளதால் இவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது,” என எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மூவரின் பிணை மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

