சென்னை: கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகப் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதனால், ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்தல் பிரசாரத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் தொடரவில்லை.
இந்தச் சம்பவத்துக்கு ஆளுங்கட்சியின் சதிதான் காரணம் என அக்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மறுபுறம், தவெகவுக்கு தாமாகவே முன்வந்து அதிமுகவும் பாஜகவும் ஆதரவுக் கரம் நீட்டுகின்றன.
கரூர் சம்பவத்தில் தனக்குக் கிடைத்த கசப்பான அனுபவத்தைப் பாடமாக எடுத்துகொண்ட விஜய், இனி சாலை மார்க்கமாக அணிவகுப்பு செய்யப்போவதில்லை (ரோடு ஷோ) என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியை விஜய் பின்பற்றப்போவதாகவும் சொல்லப்படுகிறது.
ஜெயலலிதாவைப் போன்று ஹெலிகாப்டரில் பிரசாரம் நடக்கும் இடத்துக்குச் சென்னையிலிருந்து நேரடியாக வரவும் கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டரிலேயே திரும்பிச் செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

