சென்னை: தாம் கேட்டிருந்தால் முதல்வர் விஜய், வீடு தேடி வந்து தமக்கு துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய பிரேமலதா, தற்போது அமைச்சர் பதவி கிடைக்கிறது என்றால் எல்லாரும் வேறு கட்சிகளை நோக்கி ஓடுகிறார்கள் என்றார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் விரும்பியபடியே கூட்டணி அமைக்கப்பட்டது என்றும் இம்முறை தேர்தல் களம் ஒரு மாயையை உருவாக்கி, சுனாமிபோல் அமைந்தது என்றும் பிரேமலதா கூறினார்.
“மக்களும் இளையர்களும் சேர்ந்து இந்தத் தேர்தலில் ஒரு முடிவு எடுத்துள்ளனர். யாரைத் தீய சக்தி என்று குறிப்பிட்டனரோ, அவர்கள்தான் தற்போது தீயசக்தியுடன் சேர்ந்து ஆட்சியமைத்துள்ளனர். தங்களை தூயசக்தி என்றும் கூறிக்கொள்கின்றனர்.
“நான் நினைத்திருந்தால், விஜய்யை சந்திக்க என்னால் முடியாதா? அமைச்சர் பதவிக்கு எல்லோரும் ஓடுகிறார்கள். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், விஜய்யே வீடு தேடிவந்து எனக்குத் துணை முதல்வர் பதவியே கொடுத்திருப்பார். இதுதான் உண்மை,” என்றார் பிரேமலதா.
ஆனால், தேமுதிக இதற்கெல்லாம் ஆசைப்படும் கட்சியல்ல என்றும் கொண்ட கொள்கைக்கும் கூட்டணி தர்மத்துக்கும் உண்மையாக இருக்கும் கட்சி தேமுதிக என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

