சென்னை: தமிழக முதல்வர் விஜய் பேசுவது போன்ற வன்போலிக் காணொளி (டீப்ஃபேக்) ஒன்று இணையத்தில் பரவிவருகிறது.
இதுபோன்ற போலிப் பதிவுகள், காணொளிகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனத் தமிழகக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்குறிப்பிட்ட வன்போலிக் காணொளியில், நிதியுதவி தேவைப்படுவோர் ஒரு ‘வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு முதல்வர் விஜய் கூறுவதுபோல் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இணையவழிக் கண்காணிப்பின்போது இந்தி மொழியில் இருந்த இந்த போலிக் காணொளியைக் கண்ட இணையக் குற்றப்பிரிவு அதிகாரிகள், கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த மோசடிக் காணொளிகளை உடனடியாக அகற்றுமாறும் அதைப் பதிவேற்றிய போலிக் கணக்குகளின் விவரங்களை வழங்குமாறும் மெட்டா (Meta) நிறுவனத்திற்கு தமிழகக் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், அக்காணொளிகள் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
பொதுமக்கள் இத்தகைய காணொளிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளவோ வாட்ஸ்அப் குழுக்களில் இணையவோ வேண்டாம் எனக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


