சென்னை: இம்மாதம் 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணி மூலம் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இந்நிலையில், அப்பேரணியின்போது விதிகள் மீறப்பட்டதாகக் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
பனகல் பூங்காவிலிருந்து தேனாம்பேட்டை வரை இடம்பெற்ற வாகனப் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்பேரணிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னைக் காவல்துறையினர் அனுமதி அளித்திருந்த நிலையில், விதிகளை மீறி சாலைகளில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
அதன் தொடர்பில் தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் செல்லவிருக்கிறார்.
இம்மாதம் 15ஆம் தேதி நெல்லை செல்லும் அவர், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார் என்று தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.