விருதுநகர்: விருதுநகர் அருகே வள்ளியூர் குமாரலிங்க புரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தி.மு.க. கூட்டணி தற்போது சிதறிய தேங்காய் போல உடைந்து வரும் நிலையில் உள்ளது.
இதற்கிடையே விழுப்புரத்தில் நடைபெற்ற மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன் என்றும், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலைப் பிரகடனம் ஏதும் செய்து விட்டீர்களா? என்றும் பேசியிருக்கிறார். அரசின் ஒரு தவறைக்கூட சுட்டிக் காட்ட முடியவில்லை,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறை 48 மணி நேரம் சோதனை நடத்தியது. தற்போது பட்டாசு தொழிலாளர்கள் பதறிப் பயந்து போய் வேலை செய்வதால் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. தி.மு.க. அரசு வந்த பிறகுதான் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.
“தி.மு.க. அரசால் தான் பட்டாசு தொழில் அழிந்து வருகிறது. அதேபோல் நெசவுத் தொழிலாளர்களுக்கு போதிய அளவில் நூல் கிடைக்கவில்லை, விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்கவில்லை. தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தவர்கள் வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.
“தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றும் என்று பேசி வருவது சரியல்ல. 200 தொகுதிகளை வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தான் கைப்பற்றும்.
“மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யால் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக தி.மு.க. ஓட்டுகள்தான் சிதறும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும்,” என்று அவர் கூறினார்.

