கார் பந்தயப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க இருப்பதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
அந்தப் போட்டிகள் முடிவடைந்த பிறகே புதுப் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அஜித் குமார் துபாயில் கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற கார் பந்தயப் போட்டியில் பங்கேற்றார்.
அவரது அஜித்குமார் ரேசிங் அணியில் உலக அளவில் பிரபலமாக உள்ள சில வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
போட்டிக்கு முன்னர் அவர்கள் அனைவருடன் அஜித் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2002ஆம் தொடங்கி தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குத் தாம் பல்வேறு கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்றதை நினைவுகூர்ந்துள்ளார் அஜித்.
“எனினும் 2004ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் என்னால் முழுமையாகப் பங்கேற்க முடியவில்லை. கடந்த 2010ஆம் ஆண்டு ஐரோப்பிய ஃபார்முலா போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
“பின்னர் திரைப்படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் கார் பந்தயப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க முடியாமல் போனது.
தொடர்புடைய செய்திகள்
“இப்போது கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்லாமல், அதற்காக ஓர் அணியை உருவாக்கி, அதன் உரிமையாளராகவும் உள்ளேன். எனவே இனி இத்தகைய போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன்.
“நடப்பு கார் பந்தயப் போட்டிகள் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை,” என அஜித் மேலும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், அவர் விஜய்யைப் போல் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடக்கூடாது என்றும் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.