சென்னை: உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் தமிழகத்திலுள்ள கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் அந்த நிலையத்தை இந்திய அணுசக்தித் துறையின் செயலாளர் அஜித்குமார் மொஹந்தி தொடங்கி வைத்தார்.
சென்னையை அடுத்துள்ள கல்பாக்கத்தில் அமைந்துள்ளது இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையம். அங்கு அதிவேக சோதனை ஈனுலையில் இருந்து வெளிவரும் வெப்பத்தை பயன்படுத்தி ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது இந்த செயல்முறைக்கு உலகம் முழுவதும் மின்சாரம்தான் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் கல்பாக்கம் நிலையத்தில் தாமிரம், குளோரின் ஆகிய வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி, வெப்ப வேதியியல் சுழற்சி முறையைப் பயன்படுத்திக் கிடைக்கும் வெப்பத்தின் மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படுவதாக திரு அஜித்குமார் மொஹந்தி தெரிவித்தார்.
இது முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பமாகும். மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பெரும் பங்களிப்புடன் இது சாத்தியமாகியுள்ளது.
ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருள்களை அணுசக்தி மூலம் உருவாக்குவது எதிர்கால எரிசக்தி தேவைக்கு மிக முக்கியமானது என்றார் திரு அஜித்குமார் மொஹந்தி.
சுற்றுச்சூழலுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் மின்சாரத்தையும் அதிக வெப்பத்தையும் அளிக்கும் ஆற்றல் அணு சக்திக்கு மட்டுமே உள்ளது என்றும் இதன் மூலம் இந்தியா நிர்ணயித்துள்ள பல்வேறு இலக்குகளை அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் அணுசக்தி தொழில்நுட்பங்களில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களுக்கு நல்ல சான்றாக அமையும் என்றார் அவர்.
எதிர்காலத்தில் பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக ஹைட்ரஜன் திகழும் என நிபுணர்கள் கணித்துள்ள நிலையில் உலக முழுவதும் குறைந்த செலவில் ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்தில், குறைந்த வெப்பத்திலேயே அதிக ஹைட்ரனை உற்பத்தி செய்யும் புதிய முறை ஆகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
அணுசக்தியைப் பயன்படுத்துவதால், நிலக்கரி போன்ற எரிபொருள்களின் தேவை குறைகிறது என்றும் சுற்றுப்புறச் சூழலை மாசடையச் செய்யும் புகை வெளியேறுவது தடுக்கப்படுகிறது என்றும் திரு அஜித் குமார் மொஹந்தி தொடக்க விழாவில் பேசும்போது குறிப்பிட்டார்.
மேலும், அணு சக்தி மூலம் வணிக ரீதியாக ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான எதிர்கால ஆராய்ச்சிகளுக்கும் புதிய நிலையம் பெரிதும் உதவும் என்றார் அணுசக்தித் துறையின் செயலாளர் அஜித் குமார்.

