பள்ளியில் ஒரே ஆண்டு படித்தவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தங்களுடன் சேர்ந்து படித்த பெண்ணின் திருமணத்தை நடத்திவைத்த நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் அண்மையில் நடந்தேறியது.
அவர்கள் அனைவரும் 1987-88ஆம் கல்வியாண்டில் ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தனர்.
கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த சில மாதங்களுக்குமுன் அவர்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றது. அப்பொழுது ஒருவருக்கு ஒருவர் தங்களது இப்போதைய நிலை குறித்து அறிந்துகொண்டனர்.
அப்பொழுதுதான் பிரியா என்ற பெண் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதையும் அவரின் பெற்றோர் இறந்துவிட்டனர் என்பதையும் சக தோழர்கள் அறிந்துகொண்டனர்.
இதனையடுத்து, திருமணம் செய்துகொள்வது குறித்து அவரது எண்ணத்தை நண்பர்கள் அறிந்துகொண்டனர்.
பின்னர் பொருத்தமான மாப்பிள்ளை தேடுவதில் இருந்து திருமணத்திற்கான எல்லா வேலைகளையும் அவர்களே பார்த்துக்கொண்டனர். திருமணத்திற்கான செலவுகள் அனைத்தையும் அவர்களே ஏற்றுக்கொண்டனர்.
பள்ளித் தோழர்கள் புடைசூழ, அண்மையில் அனில் என்பவரை மணந்துகொண்டார் பிரியா.
ஏறக்குறைய 110 பேர் கொண்ட அந்தப் பள்ளித் தோழர்கள் குழுவிற்கு ‘சுவர்ணமுத்ரா’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.