உலகளாவிய கொவிட் -19 கிருமிப்பரவல் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கியது முதல், வௌவால்கள் குறித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நோய் வௌவால்களிடையே தோன்றியவை என அண்மை ஆய்வுகள் காட்டினாலும், வௌவால்களைக் காண நேரும்போது எவரும் பதற்றம் அடையத் தேவையில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் பேட்டி எடுத்துள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய பூங்காக் கழகம், விலங்குகளுக்கிடையிலான நோய்களைக் கண்காணிக்க திட்டங்களை வைத்திருப்பதாக கழகத்தின் விலங்கு மற்றும் விலங்கு மருத்துவச் சேவைகளுக்கான குழும இயக்குநர் டாக்டர் சாங் சியாவ் பூங் தெரிவித்தார்.
"2011ஆம் ஆண்டு முதல் தேசிய பூங்காக் கழகம் இங்குள்ள வௌவால்களை ஆய்வு செய்து வருகிறது. இதுவரை சிங்கப்பூரிலுள்ள வெளவால்களில் கொவிட் 19 கிருமி இருப்பதாக நாங்கள் கண்டுபிடிக்கவில்லை," என்று கூறினார் டாக்டர் சாங்.
தேசிய பூங்காக் கழகம் உள்ளூர் வனவிலங்குகளை அணுக்கமாகக் கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.
ஜனவரி மாதம் 1ஆம் தேதிக்கும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதிக்கும் இடையே தேசிய பூங்காக் கழகம் வௌவால்கள் குறித்த 139 புகார்களைப் பெற்றது. இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்திற்கான எண்ணிக்கையுடன் ஒப்புநோக்க சுமார் மூன்று மடங்காக உள்ளது.
வௌவால்கள் குறித்த புகார்களையும் அதிகம் பெறுவதாக ஏக்கர்ஸ் விலங்கு மீட்புக் குழு தெரிவித்தது. கடந்த மாதத்தில் மட்டும் வெளவால்களை அகற்றக் கோரி பத்து அழைப்புகள் தங்களுக்கு வந்ததாக ஏக்கர்சின் துணைத் தலைமை நிர்வாகி திருவாட்டி அன்பரசி பூபால் தெரிவித்தார்.
கிருமிப்பரவலுக்கு முன்னதாக ஏக்கர், மாதத்திற்குச் சராசரியாக ஐந்துக்குக் குறைவான புகார்களைப் பெற்றது. வௌவால்களைக் கண்டு அஞ்சவேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட திருவாட்டி அன்பரசி, அவ்விலங்கு துன்பப்படுவதைக் கண்டால் மட்டும் தங்களை அழைக்க ஊக்குவித்துள்ளார்.