முன்னாள் தொடர்பு, தகவல் அமைச்சரான யாக்கோப் இப்ராகிம், அரசியலில் இருந்து பிரியாவிடை பெற்றார். அவர் கடந்த 23 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார்.
இனி தனது வாழ்வின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கப்போவதாகக் கூறிய 64 வயதாகும் டாக்டர் யாக்கோப், தன்னுடன் பணியாற்றியவர்கள், அடித்தள அமைப்புகளின் தலைவர்கள், சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன், “ஜாலான் புசார் குழுத் தொகுதியின் கொலம் ஆயர் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் பலரை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பை நான் கிடைக்கப்பெற்றேன். அங்கு நான் சந்தித்த குழந்தைகள் இப்போது வளர்ந்து பெரியவர்களாகி பெருமைமிகு பெற்றோராகி இருப்பதைக் காண்கிறேன். சிலர் அந்த இடத்தை வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்று விட்டனர். நான் அங்கு அவர்களுடனே வளர்ந்து அவர்களில் ஒருவராக, நண்பராக உள்ளேன்,” என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்டான்ஃபர்ட் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறை முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் யாக்கோப் இப்ராகிம், 1997ல் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பதற்கு முன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார்.
2011ஆம் ஆண்டு வரை ஜாலான் புசார் குழுத்தொகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் மோல்மின்-காலாங் குழுத்தொகுதியில் மசெக உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2001ல் மத்திய வட்டாரத்தின் முதல் மேயராகப் பதவியேற்றார். 2003ல் சமூக மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சராகவும் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சராகவும் 2018வரை பதவி வகித்தார்.
இன, சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதில் முக்கிய பங்காற்றியவர் என பிரதமர் லீ சியன் லூங், டாக்டர் யாக்கோப்பை புகழ்ந்தார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online