சீனாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் மூவாண்டுகளுக்குப் பின்னர் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மில்லியன் கணக்கான சீனர்கள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் சீனப் புத்தாண்டை கொண்டாடும் குதூகலத்தில் திளைத்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவில் கடும் கிருமித் தொற்று கட்டுப்பாடுகளால் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு போகமுடியாமல் தவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சென்ற டிசம்பர் மாதம் கொவிட்-19 கட்டுப்பாடுகளை சீன அரசாங்கம் தளர்த்தியது.
ஜனவரி 7ஆம் தேதி சீனாவின் வசந்தகாலக் கொண்டாட்டம் தொடங்கியது. அதுவரை கிட்டத்தட்ட 480 மில்லியன் பயணங்கள் சீனாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாற்பது நாள்கள் நீடிக்கும் கொண்டாட்ட காலக்கட்டத்தின்போது சுமார் 2.1 பில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

