இஸ்தான்புல்: துருக்கி நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த பல்லாயிரக்கணக்கான வீடுகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று துருக்கிய அதிபர் ரெச்சப் தய்யிப் எர்துவான் சூளுரைத்துள்ளார்.
வரலாற்றில் மறக்க முடியாத மற்ற இயற்கைப் பேரிடர்களைப்போலவே துருக்கி இதையும் கடந்துவிடும் என்று அவர் உறுதி தெரிவித்தார். துருக்கித் தலைநகர் ஆங்க்ராவில் அமைச்சரவைச் சந்திப்பில் பேசிய திரு எர்துவான், "இந்தப் பேரிடர், நூற்றாண்டின் பேரிடராக அழைக்கப்படுகிறது. இறுதிவரை எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடர்வோம்," என்றார்.
நிலநடுக்கத்தில் இதுவரை 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்; குறைந்தது ஒரு மில்லியன் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்நிலையில், வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதை அரசாங்கம் அதன் இலக்குகளில் ஒன்றாக நிர்ணயித்துள்ளதாக திரு எர்துவான் கூறினார்.
"இன்னும் ஓராண்டில் வீடுகளைக் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்க நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம். கடந்த பல ஆண்டுகளில் நிலநடுக்கத்தாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வீடுகளைக் கட்டியெழுப்பியதைப்போலவே இம்முறையும் நாங்கள் செய்யவுள்ளோம்," என்றார் அவர்.
ரிக்டர் அளவில் 7.8 எனப் பதிவான நிலநடுக்கம், 1939க்குப் பிறகு துருக்கியில் அதிகமானோரின் உயிர்களைப் பலிவாங்கிய நிலநடுக்கமாகும். இடிந்து விழுந்த வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப பத்து ஆண்டுகளுக்கும் மேலாகும் எனக் கூறப்படுகிறது.
"இந்த தேசம் பல இயற்கைப் பேரிடர்களைக் கடந்து வந்துள்ளது. அதேபோல இதையும் நாங்கள் கடந்து செல்வோம்," என்றார் திரு எர்துவான்.

