கொவிட்-19 கொள்ளைநோய்க்குக் காரணமான கிருமி வூஹானில் கண்டறிவதற்கு முன் னர் வேறெங்காவது பரவி இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனக் குழுவும் சீன நிபுணர் குழுவும் இணைந்து தெரிவித்துள்ளன. 2019ஆம் ஆண்டு இறுதியில் வூஹானில் கிருமிப் பரவல் கண்டறியப்படுவதற்கு முன்னர் அங்கு அதற்கான எந்தவொரு தடயமும் இல்லை என சீனாவின் சுகாதார ஆணையத்தின் நிபுணர் டாக்டர் லியாங் வேனியன் கூறினார்.
கிருமி தோன்றிய விதம் குறித்து விசாரணை செய்ய சீனாவின் வூஹான் நகருக்கு வந்த உலக சுகாதாரக் குழு கிட்டத்தட்ட ஒரு மாத கால விசாரணையை முடித்த பின்னர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தது. சீனாவின் சுகாதார நிபுணர்களும் அக்குழுவினருடன் இணைந்துகொண்டனர்.
மேலும் இந்தக் கிருமி விலங்கிடம் இருந்து மனிதனுக்குப் பரவியதா என விசாரணையில் கண்டறியப்படவில்லை என்றும் டாக்டர் லியாங் தெரிவித்தார்.
விலங்கிடம் இருந்து மனிதனுக்கு கிருமி பரவும் சாத்தியம் இருந்தபோதிலும் கொவிட்-19 விவகாரத்தில் அது குறித்த அடையாளம் தென்படவில்லை என்றார் அவர்.
உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் பென் எம்பரெக் கூறுகையில், தங்களது குழுவினர் நடத்திய விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்தபோதிலும் அது கிருமி பரவிய விதத்திற்கு மாறானதாக இல்லை என்றார்.
"வௌவால்கள் வாழும் இயற்கை வனப் பகுதியில் இருந்து கொரோனா கிருமி தோன்றி இருக்கலாம் என்பதனை அறிய விசாரணை நடத்தப்பட்டது. ஆயினும் அந்த இடம் வூஹான் நகரில் இருப்பதுபோலத் தெரியவில்லை," என்றார் அவர்.

