கோலாலம்பூர்: வெளிநாட்டு ஊழியர்களை அனுமதிக்கும் தளர்வுத் திட்டத்தை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் ஆராயும் என்று மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்தார்.
முக்கியத் துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்கான தளர்வுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, அந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.
மனிதவள அமைச்சின் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான சிவக்குமார் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய தளர்வுத் திட்டம் உற்பத்தி, கட்டுமானம், உணவக சேவைத் துறை, தோட்ட, விவசாயம் ஆகிய துறைகள், அதன் துணைத் துறைகளுக்குப் பொருந்தும் என்றார் அவர்.
"தொழிலாளர் தேவை அதிகம் உள்ள இந்த ஐந்து முக்கியமான துறைகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்டுவர உள்துறை அமைச்சும் மனிதவள அமைச்சும் முடிவு செய்துள்ளன.
"இந்த முக்கியத் துறைகள், அதன் துணைத் துறைகளில் வெளிநாட்டு ஊழியர் பற்றாக்குறையை சரி செய்தவுடன், மூன்று மாதங்களுக்குப் பிறகு சில்லறை விற்பனைத் துறை, பிற துறைகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிப்போம்," என்று அவர் கூறினார்.
தொழில்துறையில் ஆள் பற்றாக்குறையை சரி செய்யும் நோக்கில், வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்கான தளர்வுத் திட்டத்தின் மூலம், மொத்தம் 500,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் படிப்படியாக மலேசியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்ற புதன்கிழமையன்று சிவக்குமார் அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தின் மூலம் ஒதுக்கீட்டு நிபந்தனை, வேலைவாய்ப்புத் தகுதிக்கான முன்நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமல், முதலாளிகள் 15 நாடுகளைச் சேர்ந்தவர்களை வேலைக்கு எடுக்க அனுமதிப்பதாக உள்துறை அமைச்சர் சைபுடின் இஸ்மாயில் சொன்னார்.

