நியூயார்க்: உலகில் 40 பணக்கார நாடுகளில் இருக்கும் 69 மில்லியன் குழந்தைகள் அல்லது ஐந்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் வறுமையில் வாடுவதாக ஐக்கிய நாட்டு சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய இரு பணக்கார நாடுகளை அவற்றின் மோசமான செயல்பாட்டுக்காக அது சாடியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தையும் பொருளியல் ஒத்துழைப்பு மேம்பாட்டு அமைப்பையும் சேர்ந்த 40 பணக்கார நாடுகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அதில் 2012க்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலும் 2019ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலும் குழந்தை வறுமையில் வாடும் விகிதம் கிடத்தட்ட 8 விழுக்காடு குறைந்துள்ளது கண்டறியப்பட்டது.
“இது 291 மில்லியன் குழந்தைகளில் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் குழந்தைகளுக்குச் சமம்,” என யுனிசெப்பின் ஆராய்ச்சிப் பிரிவு கூறியுள்ளது.
2021 இறுதியில் அந்த நாடுகளில் இன்னும் 69 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வறுமையில் வாடியதாக அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
“அந்நாடுகளில் இருக்கும் பெரும்பாலான குழந்தைகள் போதுமான சத்துணவு, உடைகள், பள்ளிப் பொருள்கள் ஆகிய அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் வளரக்கூடும் என்பது இதற்கு அர்த்தம்,” என யுனிசெஃப் அமைப்பின் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் தொலைநோக்கு நிலைய இயக்குநர் டாக்டர் போ விக்டர் நைலுண்ட் கூறினார்.
ஒரு நாட்டின் வளம் அந்நாட்டுக் குழந்தைகளை வறுமையிலிருந்து தானாக மீட்டெடுக்கவில்லை என்பதை அவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.
ஆய்வு நடத்தப்பட்ட நாடுகளில் குழந்தைகளின் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அந்நாடுகளுக்கு யுனிசெஃப் அழைப்பு விடுத்துள்ளது.