தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவின் வடமேற்குப் பகுதியில் உள்ள விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) பல்வேறு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 26 பேர் காயமடைந்தனர்.
தோக்கியோவின் கனெட்சு விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர் 70 வயதான மூதாட்டி என்று கூறிய காவல்துறை, இவ்விபத்தில் குறைந்தது 17 வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததாகவும் தெரிவித்தது.
இவ்விபத்தில் சிக்கிய ஐவர் படுகாயமடைந்தனர். கடும் பனிப்பொழிவால் நகர வீதிகள் ஈரமாகக் காணப்பட்டன என்றும், இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்க நேரிட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீயில் கருகிய வாகனங்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்குப் பலத்த சேதமுற்றதாகவும், இவ்விபத்தால் பல மணி நேரம் சாலைகள் உள்பட விரைவுச்சாலை பாதைகள் மூடப்பட்டன என்றும் காவல்துறை தெரிவித்தது.
இவ்விபத்தை நேரில் பார்த்த 60 வயதான லாரி ஓட்டுநர் ஒருவர், தனக்கு முன்னால் வந்த காரில் மோதுவதை தவிர்ப்பதற்காகத் தமது வாகனத்தைத் திருப்பியபோது தாமும் விபத்தல் சிக்கியதாகத் தெரிவித்தார். வாகனங்கள் ஒன்றோடுன்று மோதியபோது, பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாகவும் அவர் சொன்னார். மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

