அமெரிக்காவைத் தாக்கியுள்ள கடும் குளிர்காலப் புயலால் பல மில்லியன் அமெரிக்கர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
குறைந்தது 19 பேர் கடும்புயலால் மாண்டதாகக் கூறப்பட்டது.
மின்சாரத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் 1.5 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
200 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு சூறாவளி தொடர்பாக ஆலோசனை அல்லது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சஸ் முதல் கனடாவின் கியூபெக் மாநிலம் வரை, 2,000 மைல்கள் கடும்புயல் நிலவுகிறது.
அமெரிக்க-கனடா எல்லை அருகே, மிகவும் வேகமாக உருவாவதால் 'வெடிகுண்டு சூறாவளி' என்றழைக்கப்படும் புயல் உண்டானது.
அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் பனிப் பொழிவும் உறைய வைக்கும் குளிரும் நிலவுகிறது.
சில இடங்களில் கொதிக்கும் தண்ணீர்கூட விநாடிகளில் பனிக்கட்டியாக மாறுவதை சமூக ஊடகக் காணொளிகள் காட்டின.
விரைவுச்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 5,700க்கும் அதிகமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மொன்டானா மாநிலத்தில் நேற்று வெப்பநிலை -45 செல்சியஸ் வரை குறைந்தது.
ஐயோவா போன்ற இடங்களில் ஐந்து நிமிடங்களுக்குள் கடும் குளிரால் ஏற்படும் தோல் உறைவு உண்டாகலாம் என்று அமெரிக்காவின் தேசிய வானிலைத் துறை கூறியது.
நியூயார்க் மாநிலத்தில் வெப்பநிலை மிகவும் குறைந்ததால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

