இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மிக உயரமான மலை ஒன்றில் உலகப் புகழ்பெற்ற மலையேறியான நிர்மல் புர்ஜா உட்பட ஒன்பது மலையேறிகள் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 30) ஏற்பட்ட பெரும்பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் மரணம் அடைந்துவிட்டனர் என்று அவர்களின் மலையேற்றத்தை ஏற்பாடு செய்த ‘இலைட் எக்ஸ்பெட்’ என்ற நிறுவனம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) உறுதிசெய்தது.
மறைந்தவர்களின் உடல்களை மீட்புப் பணியாளர்கள் தேடிவருவதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
அந்த மலையேற்றக் குழுவை தலைமை ஏற்று வழிநடத்திய நிர்மல் புர்ஜா அந்த நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவர்.
சீனாவின் எல்லை இருகே கில்கிட் பல்டிஸ்தான் பகுதியில் உள்ள காராகோரம் என்ற மலைத்தொடரில் ‘புரோட் பீக்’ என்ற மலையில் அச்சம்பவம் நிகழ்ந்தது. அந்த மலையின் உயரம் 8,047 மீட்டர் ஆகும். அந்த மலை, உலகின் மிக உயரமான மலைகளில் 12ஆம் இடத்தில் உள்ளது.
“உலகம் ஒரு மிகச்சிறந்த மலையேறியை இழந்துவிட்டது,” என திரு நிர்மல் புர்ஜாவின் நிறுவனம் தெரிவித்தது.
மறைந்த அனைத்து உயிர்களுக்கும் இரங்கல் தெரிவித்த நிறுவனம், கற்பனை செய்து பார்க்கமுடியாத துயரத்தை எதிர்கொள்வதால் அதனை விளக்க வார்த்தைகள் இல்லை என்று அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
தொடரும் மீட்புப் பணிகள்
மீட்புப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை மூன்று உடல்களை கண்டெத்தனர். கடுமையான வானிலையால் ராணுவ ஹெலிகாப்டர்கள் சரிவர இயங்கமுடியவில்லை. அதனால் மீட்புப் பணிகள் தடைபட்டன.
மறைந்தோர் உடல்களைத் தேடும் முயற்சியை மீட்புப் பணியாளர்கள் சனிக்கிழமை மீண்டும் மேற்கொண்டனர்.

