கியவ்: உக்ரேனின் தலைநகர் கியவ்வில் ரஷ்யா வெள்ளிக்கிழமை (ஜூலை 24) நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உக்ரேனின் தற்காப்புத் துறை சார்ந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது அந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்று அந்நாட்டுஅதிகாரிகளும் துறை சார்ந்த பிரதிநிதிகளும் உறுதிப்படுத்தினர்.
உக்ரேன் அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி தாக்குதல் நடந்த இடத்தை நேரடியாக குறிப்பிடாமல் என்ன நடந்தது என்பதை அறிய விசாரணை நடந்துவருவதாக மட்டும் தெரிவித்தார்.
“ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, கியவ் பகுதியில் மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன,” என்று அதிபர் ஸெலன்ஸ்கி டெலிகிராம் செயலியில் பதிவிட்டார்.
“தனியார் பயிற்சி மைதானத்தில் நிகழ்ச்சிகள் நடக்கும்போது கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணைத் தாக்குதல் நடந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என கியவ் வட்டார தற்காலிக ஆளுநர் ருஸ்லான் ஒலிநிக் கூறினார்.
உக்ரேன் தற்காப்பு மன்றம்
தற்காப்புத் துறை பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தாக்குதல் நடந்ததை உக்ரேனின் தற்காப்பு மன்றம் உறுதிப்படுத்தியது.
அந்த நிகழ்ச்சியை மன்றம் ஏற்பாடு செய்யவில்லை எனவும், பங்கேற்றோர் எங்கு இருக்கிறார்கள் போன்ற விவரங்கள் தம்மிடம் இல்லை என்றும் மன்றம் கூறியது.

