ஈப்போ: ஈப்போவில் உள்ள குவா மட்சூரட் குகைச் சுவரில் பதிந்திருந்த, கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகள் பழமையானதாக நம்பப்படும் முள்ளம்பன்றியின் புதைப்படிமம் காணாமல் போயுள்ளது.
இது, புவியியல் பாரம்பரியத் தளங்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்த முள்ளம்பன்றியின் பற்கள், தாடை எலும்பு ஆகியவற்றின் புதைப்படிமங்களை ‘கிந்தா வேலி வாட்ச்’ என்ற சுண்ணாம்பு பள்ளத்தாக்குப் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழிகாட்டியும், தன்னார்வலரும், மலையேற்ற வீரருமான முகமது ஜைரிஸ் அப்துல் ராணி கண்டறிந்தார்.
ஆனால், இவ்வாண்டு ஜனவரி மாத இறுதியில் அந்தக் குகைப் பாதைக்குள் அவர் சென்றபோது, இரு இடங்களில் அமைந்திருந்த அந்தப் புதைப்படிமங்களைக் காணவில்லை.
அவை மின்கலன் மூலம் இயங்கும் வெட்டுக் கருவியைக் கொண்டு வெட்டி எடுக்கப்பட்டிருக்கலாம் என திரு அப்துல் ராணி தெரிவித்தார்.
அவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை என்றும் இது போன்ற புதைப்படிமங்களைக் கண்டறிவது மிகவும் கடினம் என்றும் அவர் மிகவும் வருத்தத்துடன் கூறினார்.


