மணிலா: பிலிப்பீன்சின் மிண்டனாவ் தீவுக்கு உட்பட்ட சரங்கானி பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இதுவரை 1,100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வு ஆய்வகம் தெரிவித்துள்ளது.
சரங்கானி அருகில் உள்ள கடற்பகுதியில் திங்கட்கிழமை (ஜூன் 8) காலை ரிக்டர் அளவில் 7.8ஆகப் பதிவான நிலநடுக்கம், சுனாமி அச்சத்தை ஏற்படுத்தியதுடன், மிண்டனாவ்வின் பல பகுதிகளில் மின்சாரம், தகவல் தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பேரளவில் சேதப்படுத்தியது.
இந்நிலையில், பிலிப்பீன்ஸ் நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) காலை 8 மணி வரை ரிக்டர் அளவில் 1.3 முதல் 6.7 வரை மாறுபட்ட தீவிரம் கொண்ட 1,100 நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 23 அதிர்வுகளைப் பொதுமக்கள் நேரடியாக உணர்ந்துள்ளனர். இந்த நில அதிர்வுகள் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

