ஈப்போ: மலேசியாவின் கெரிக் நகரில் யாரும் பயன்படுத்தாமல் விட்டுச்சென்ற வாகனம் ஒன்றில் சுமார் 4.67 மில்லியன் ரிங்கிட் (1.41 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான 123.2 கிலோகிராம் போதைப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் இருந்த அந்த காரின் ஓட்டுநரையோ அதிலிருந்திருக்கக்கூடிய பயணிகளையோ காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை என்று பேராக் மாநிலக் காவல்துறைத் தலைவர் நூர் ஹிசாம் நூர்தின் தெரிவித்தார்.
தாமான் புலாய் சவானா நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே எஸ்யுவி ரக காரில் இம்மாதம் ஆறாம் தேதி போதைப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. ‘ஹோண்டா எச்ஆர்வி’ காரில் அந்த போதைப்பொருள்கள் காணப்பட்டதாக திரு நூர் ஹிசாம் தெரிவித்தார் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
இச்சம்பவம், பேராக் காவல்துறையினர் இவ்வாண்டு ஆக அதிக அளவில் போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்த நிகழ்வுகளில் அடங்கும் என்றும் திரு நூர் ஹிசாம் தெரிவித்தார். பறிமுதலான இந்த போதைப்பொருள்கள், உள்ளூர் பயன்பாட்டுக்கானவை என்றும் அவை 350,000 போதைப் புழங்கிகள் பயன்படுத்தக்கூடியவை என்று நம்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.