குமாமோட்டோ நிலநடுக்கத்தில் 13 பேர் மரணம்: ஜப்பானியப் பிரதமர்

குமாமோட்டோ நிலநடுக்கத்தில் 13 பேர் மரணம்: ஜப்பானியப் பிரதமர்

2 mins read
88631350-0b1a-4db9-8998-f97988f3daa9
நிலநடுக்கத்தால் குமாமோட்டோவில் உள்ள முக்கிய ஆலை ஒன்றில் ஏற்பட்ட சேதம். - படம்: ராய்ட்டர்ஸ்

குமாமோட்டோ: ஜப்பானின் கியூ‌ஷூ தீவின் குமாமோட்டோ நகரை உலுக்கிய நிலநடுக்கத்தில் ஆகக் கடைசி நிலவரப்படி 13 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டுப் பிரதமர் சானே தக்காய்ச்சி தெரிவித்துள்ளார்.

ரிக்டரில் 7.1 அளவிலான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) அப்பகுதியை உலுக்கியிருந்தது. அதனைத்தொடர்ந்து இன்னும் பலர் காப்பாற்றப்படுவதற்காகக் காத்திருப்பதாகத் திருவாட்டி தக்காய்ச்சி குறிப்பிட்டார்.

அதற்கான நேரம் குறைந்துகொண்டே வருவதாகவும் அவர் சொன்னார்.

பாதுகாப்பு நிலையங்களில் 9,000 பேர்

புதன்கிழமை (ஜூலை 29) காலை நிலவரப்படி நிலநடுக்கத்தினால் 9,000 பேருக்கும் அதிகமானோர் பாதுகாப்பு நிலையங்களில் இருப்பதாக ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பல நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த குமாமோட்டோ கோட்டை சேதமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்துக்குப் பிறகு காணப்பட்ட குமாமோட்டோ கோட்டை.
நிலநடுக்கத்துக்குப் பிறகு காணப்பட்ட குமாமோட்டோ கோட்டை. - படம்: ஏஎஃப்பி

கோட்டையின் கற்சுவர்களில் ஒன்று பாதி அளவுக்குக் விழ்ந்தது காணொளிகளில் தெரிந்தது.

ஏயியோன் கடைத்தொகுதி

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குமாமோட்டோ நகரில் உள்ள ஏயியோன் கடைத்தொகுதியில் வெடிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குமாமோட்டோவில் உள்ள ஏயியோன் கடைத்தொகுதி.
குமாமோட்டோவில் உள்ள ஏயியோன் கடைத்தொகுதி. - படம்: ராய்ட்டர்ஸ்

பலர் அக்கடைத்தொகுதியில் இன்னும் சிக்கியிருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது இருவர் அக்கடைத்தொகுதியில் மாண்டுவிட்டதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஏயியோன் நிறுவனத்தின் பங்குகளின் விலை குறைந்தது.

மின்சாரம் துண்டிப்பு

ஆகக் கடைசி நிலவரப்படி 36,000க்கும் அதிகமான வீடுகளில் இன்னும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை இருந்த நிலையில் மின்சாரம் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டோர் வெப்பத் தாக்கத்துக்கு (heat stroke) ஆளாகக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

மருத்துவமனைகளுக்குச் சிக்கல்

இந்நிலையில், சில மருத்துவமனைகள் பெரும் சவால்களை எதிர்நோக்கிவருகின்றன. எடுத்துக்காட்டாக, நிலநடுக்கம் தொடங்கிய பகுதிக்கு அருகே உக்கி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த மருத்துவமனையால் சரியாகச் செயல்பட முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் உலுக்கியபோது அதிவேக ரயில்களில் பயணம் செய்த சிலரும் காயமடைந்ததாக அச்சேவைகளை நடத்தும் நிறுவனங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்