கோலாலம்பூர்: மலேசிய அரச குடும்பத்தைச் சேர்ந்த 26 உறுப்பினர்களின் பெயர்களில் சமூக ஊடகங்களில் மொத்தம் 15,296 போலிக் கணக்குகள் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் அந்தப் போலிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் கண்காணிப்பாலும் பொதுமக்களின் புகார்களாலும் அது சாத்தியமானது.
அவற்றுள் சிலாங்கூர் மன்னர் பெயரிலும் இயங்கிய போலிக் கணக்குகளும் அடங்கும்.
சிலாங்கூர் மன்னரை வெள்ளிக்கிழமை (மே 8) சந்தித்துப் பேசிய தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில், அரச குடும்பத்தினரின் பெயர்களில் இயங்கிய போலிக் கணக்குகளை நீக்குவது குறித்த அண்மை அறிக்கைகளை வழங்கியதாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மலேசிய அரசு விடுத்த கோரிக்கைகளை ஏற்று, அத்தகைய 14,750 போலிக் கணக்குகளைச் சமூக ஊடகங்கள் நீக்கிவிட்டதாக ஒரு ஃபேஸ்புக் பதிவின் வழியாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்றைய இணைய உலகில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, ‘மின்னணு முறையில் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்’ ‘(e-KYC) எனும் அடையாளச் சரிபார்ப்பு முறையை அமல்படுத்துவது குறித்தும் சிலாங்கூர் சுல்தானிடம் விளக்கப்பட்டது.

