மூவார்: ஜோகூர் சாலைப் போக்குவரத்துத் துறை ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி இரவு 10.30 மணி வரை நடத்திய ஒருங்கிணைந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின்போது சரக்கு, பொதுச் சேவை வாகனங்களை ஓட்டிய 16 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதிசெய்யப்பட்டது.
மலேசிய அரசக் காவல்துறை, தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகவை, ‘பிளஸ் மலேசியா’ நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஸுல்கர்னைன் யாசின் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
போதைப்பொருள் சோதனையில் சிக்கிய ஓட்டுநர்களின் தொழில்முறை ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்றும் திரு ஸுல்கர்னைன் சொன்னார்.
அச்சோதனையின்போது சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் பல்வேறு விதிமீறல்களையும் போக்குவரத்துத் துறை கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சிறுநீர்ப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 164 ஓட்டுநர்களில், 10 பேர் மெத்தம்ஃபெட்டமைன், மூவர் ஐஸ், இருவர் கஞ்சா, ஒருவர் மோர்ஃபின் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது சோதனையில் தெரியவந்துள்ளது.

