ஹனோய்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டித் தொடரில் இரண்டு பெரிய சூதாட்டக் கும்பல்களைச் சேர்ந்த 85 சந்தேகப் பேர்வழிகளை வியட்னாமியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கம்யூனிச சித்தாந்தத்தைப் பின்பற்றும் அந்நாட்டில் இணையச் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் அனைத்துலகப் போட்டிகள், விளையாட்டுகள் சார்ந்த பந்தயப் பிடிப்பு வழியாக அதிகப் பணம் கிடைப்பதால் சட்டவிரோதமாக அவ்வப்போது அங்கு அவை நடைபெறுகின்றன. காவல்துறையும் அதிரடியாகச் சோதனைகள் மேற்கொள்கின்றன.
ஜூன் மாதம் நடந்த அரசாங்கச் சோதனைகளில் பல உயர்மட்ட நிலையில் இயங்கியவர்கள் கைதாகினர் என்று ஹோ சி மின் நகரக் காவல்துறை அறிக்கையில் தெரிவித்தது.
2025ஆம் ஆண்டுமுதல் அந்த குற்றக் கும்பல் S$171.8 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத பரிவர்த்தனைகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்போடியாவில் இருந்து பல வசதிமிக்க தனிநபர்கள் பந்தயப் பிடிப்பில் தொடர்புகொண்டதாகக் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நடந்த சோதனையில் 73 சூதாட்டக் கும்பல்கள் முறியடிக்கப்பட்டு, 346 சந்தேக நபர்கள் கைதாகினர் என்று வியட்னாமின் பொதுப் பாதுகாப்பு அமைச்சு கடந்த வாரம் தெரிவித்தது. அக்கும்பல்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்கிய முதல் 20 நாள்களில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டன.

