நியூயார்க்: வரலாற்றிலேயே மிகப் பெரிய நிதி மோசடிகளில் ஒன்றாகக் கருதப்படும் 1எம்டிபி ஊழலின் மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மலேசிய நிதி ஆலோசகர் ஜோ லோ, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
மலேசியாவின் 1எம்டிபி அரசாங்க நிதியிலிருந்து ஏறத்தாழ 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஜோ லோ மீது 2018ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும், அவர் இதுவரை பிடிபடாமல் தலைமறைவாகவே உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க நீதித் துறையிடம் அவர் மன்னிப்பு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளதாக அந்தத் துறையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரத்தில் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் உள்ளிட்ட வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கோடிக்கணக்கான பணம் வழங்கப்பட்டதாக அமெரிக்க அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோல்ட்மன் சாக்ஸ் வங்கியின் முன்னாள் அதிகாரிகளின் உதவியுடன் இந்த மோசடி அரங்கேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊழல் மலேசிய அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியதோடு, சம்பந்தப்பட்ட வங்கிக்கும் பல பில்லியன் டாலர் அபராதத்தை பெற்றுத் தந்தது. ஜோ லோவின் இந்த மன்னிப்பு கோரிக்கை தற்போது நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

