ஜப்பான்: ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் மூண்ட காட்டுத் தீயில் கிட்டத்தட்ட 200 ஹெக்டர் பரப்பளவிலான நிலப்பகுதி கருகியுள்ளதாக அந்நாட்டுத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
புதன்கிழமை (ஏப்ரல் 22) மூண்ட தீ வியாழக்கிழமைவரை தொடர்ந்து எரிந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.
காட்டுத் தீயின் பாதிப்பு: ஏழு கட்டடங்கள் எரிந்தன
இவாட்டே மாநிலத்தில் உள்ள ஒட்சுச்சி என்ற மலைப்பகுதியில் தீ மூண்டது. ஏழு கட்டடங்கள் தீக்கிரையாகின.
தீயை அணைக்க இவாட்டே மாநில அரசாங்கமும் தற்காப்புப் படைப் பிரிவும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டன. மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளில் எரிந்துகொண்டிருந்த தீயைக் கட்டுக்குள் கொண்டுவர இவாட்டே தீயணைப்பு, பேரிடர் நிர்வாக அமைப்பு அருகில் உள்ள மியாகி மாநிலத்தின் அவசரத் தீயணைப்புக் குழுவின் உதவியை நாடியது.
தீ கடுமையானதை அடுத்து ஒட்சுச்சியில் உள்ள தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவை மூடப்பட்டன.
ஏப்ரல் 23ஆம் தேதி பிற்பகல் நிலவரப்படி, ஒட்சுச்சி நகர அதிகாரிகள், 1,229 வீடுகளிலிருந்து 2,588 பேர் வெளியேறும்படி உத்தரவிட்டனர்.
“நிலவரம் இங்கு நிமிடத்துக்கு நிமிடம் மாறுகிறது,” என்றார் ஒட்சுச்சி மேயர் கோஸோ ஹிரானோ.
தொடர்புடைய செய்திகள்
தீயின் நிலவரம் குறித்து குடியிருப்பாளர்களுக்கு அவ்வப்போது தகவல் அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

