சுரபாயா: இந்தோனீசியாவின் சுரபாயா நகரில் இலவசமாக வழங்கப்படும் உணவை உட்கொண்ட சுமார் 200 மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஜாவா மாநிலத் தலைநகரான சுரபாயாவின் தெம்போக் டுக்கு பகுதியில் மொத்தம் 12 பாலர்பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், நடு உயர்நிலைப் பள்ளிகள் (junior high school) சேர்ந்த மாணவர்களிடையே நச்சுணவு அறிகுறிகள் காணப்பட்டன. இம்மாதம் 11ஆம் தேதி அரசாங்க இலவச உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட பிறகு இப்பிரச்சினை எழுந்தது.
மருத்துவமனை அனுமதி தேவைப்படவில்லை
மே மாதம் 11ஆம் தேதி பிற்பகல் நிலவரப்படி பாதிக்கப்பட்ட எந்த மாணவருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி மோஜோகெர்ட்டோ பகுதியில் பள்ளி இலவச உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 216 மாணவர்கள் நச்சுணவுப் பிரச்சினைக்கு ஆளாயினர். ஜனவரி 14ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 411க்கு அதிகரித்தது.
ஊட்டச்சத்து குறைபாட்டைச் சரிசெய்யும் நோக்குடன் அரசாங்கம் உருவாக்கியுள்ள இலவச உணவுத் திட்டத்தில் பல பிரச்சினைகள் இருப்பதை முன்னதாக இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ சனிக்கிழமை (மே 16) ஒப்புக்கொண்டார். சென்ற ஆண்டு ஜனவரி மாதம் பல பில்லியன் டாலர் மதிப்பிலான இத்திட்டம் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

