பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் 2015ல் 20 பேரின் உயிரைப் பறித்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில், சீனாவின் வடமேற்குப் பகுதியான ஸின்ஜியாங்கைச் சேர்ந்த உய்கர் இன ஆடவர்கள் இருவருக்குத் தாய்லாந்து நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூன் 11) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
பேங்காக்கின் மையப்பகுதியில், வெளிநாட்டுப் பயணிகள் அதிகமாகக் கூடும் எராவான் வழிபாட்டுத் தலத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 20 பேர் உயிரிழந்ததோடு, 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் ஐவர் சீனாவையும் இருவர் ஹாங்காங்கையும் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யப்போவதாக அவர்களில் ஒருவரின் வழக்கறிஞரான சூசாட் கன்பாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஆரம்பத்திலிருந்தே மறுத்து வந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான சாட்சிகளிடமிருந்து அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஆதாரங்களைத் திரட்டியதாலும், சந்தேக நபர்களுக்குப் பொருத்தமான மொழிபெயர்ப்பாளரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் நீடித்ததாலும், இவ்வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளது.

