ஜனவரி 22: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் மிகப் பிரம்மாண்டமான ராமர் கோயில் திறக்கப்பட்டது. 1992ல் பாபர் மசூதி, இந்து அடிப்படைவாதிகளால் இடிக்கப்பட்டதை அடுத்து அதே இடத்தில் ராமர் கோயிலை அங்கு ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி நிறுவியது.
ஜனவரி 31: ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர், மலேசியாவின் 17வது மாமன்னராக அரியணை ஏறினார்.
பிப்ரவரி 14: இந்தோனீசியாவின் முன்னைய ராணுவத் தலைவர் பிரபோவோ சுபியாந்தோ, அதிபர் தேர்தலில் வென்றார்.
மார்ச் 31: செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகின் முதல் சட்ட ரீதியான கட்டமைப்பை ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிமுகம் செய்துள்ளது.
ஜூன் 9: 2024 இந்தியப் பொதுத்தேர்தலில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து, மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.
ஜூலை 5: பிரிட்டனில் லேபர் கட்சியின் கியர் ஸ்டாமர் பிரதமர் பதவியை ஏற்றார். 14 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் எதிர்பாரத தோல்வி கண்டதில், அந்நாட்டின் முதல் ஆசிய இனத்துப் பிரதமரான ரிஷி சுனாக்கின் பிரதமர் பதவி ஈராண்டுகளில் முடிவுக்கு வந்தது.
ஜூலை 19: உலகளவில் ஏற்பட்ட இணையச் சேவைத்தடையால் பல்வேறு பெரும் அமைப்புகளின் செயல்பாடுகள் தடைப்பட்டன. சிங்கப்பூரில் விமானச் சேவைகள், வங்கிகள், ஊடகங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.
ஜூலை 26: பல அரசியல் குழப்பங்களுக்கிடையே பிரான்ஸ், 33வது ஒலிம்பிக் போட்டிகளை ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை சிறப்பாக நடத்தி முடித்தது. பாரிசில் நடந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10,000க்கும் அதிகமான விளையாட்டாளர்கள் போட்டியிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை 30: கேரளாவின் வயநாடு மாவட்டத்தை வாட்டிய கனமழை, வெள்ளத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 334 பேர் உயிர் இழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், 281 பேரைக் காணவில்லை.
ஆகஸ்ட் 5: பங்ளாதேஷில் பல மாத போராட்டத்தை அடுத்து வெடித்த கிளர்ச்சியால் பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலக நேரிட்டது. இருமுறை அந்நாட்டுப் பிரதமராக இருந்த அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். பங்ளாதேஷின் நோபெல் பரிசு பெற்ற பொருளியலாளரான முகமது யூனோஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி அமைந்தது.
ஆகஸ்ட் 14: தாய்லாந்தில், சிறைத்தண்டனை பெற்ற ஒருவரை அமைச்சராக பிரதமர் ஸ்ரெத்தா தவிஷின் சட்டவிரோதமாக நியமித்ததற்காக அந்நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் அவரது அரசாங்கத்தை கலைத்தது. முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்தின் மகள் பெடோங்டார்ன் ஷினவாத் பிரதமராகப் பதவியேற்றார்.
செப்டம்பர் 23: இலங்கையின் புதிய அதிபராக மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் அனுர குமார திசாநாயக்க பதவியேற்றார். இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் என்பதுடன் பெருமளவு தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற அதிபர் என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.
அக்டோபர் 13: ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) விண்வெளிக் கப்பல், உலகிலேயே சக்திவாய்ந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம், சூப்பர் ஹெவி பூஸ்டரை முதன்முறையாக வெற்றிகரமாக மீட்டு பிடித்துள்ளது.
அக்டோபர் 27: தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய, தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் முதல் கட்சி மாநாடு விழுப்புரம், விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
நவம்பர் 5: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டோனல்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசை வீழ்த்தி அந்நாட்டின் 47ஆவது அதிபராக அடுத்த ஆண்டு அவர் பதவி ஏற்கவுள்ளார். ஏறத்தாழ 130 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர், ஒரு தவணை இடைவெளிக்குப் பிறகு அதிபராகிறார்.
நவம்பர் 21: இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, தற்காப்பு அமைச்சர் யோவாவ் கெல்லண்ட், ஹமாஸின் ராணுவத் தலைவர் முஹம்மது தெயிஃப் ஆகியோருக்கு எதிராக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் கைதாணைகளைப் பிறப்பித்தது.
செப்டம்பர் 23: இஸ்ரேல்-பாஸ்தீன மோதலின் ஆக மோசமான உச்சமாக, லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 569 பேர் கொல்லப்பட்டனர்.1,835 பேர் காயமடைந்தனர்.
டிசம்பர் 3: தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ராணுவ ஆட்சிச் சட்டத்தை அறிவித்தார். அந்த நாட்டு நாடாளுமன்றம், திரு யூன் முடிவை ஆறு மணி நேரத்திற்குள் ரத்து செய்தது. அடுத்த 11 நாள்களில் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட திரு யூன் விசாரணையை எதிர்நோக்குகிறார்.
டிசம்பர் 4: நாடாளுமன்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் பிரஞ்சுப் பிரதமர் மிஷெல் பார்னியே பதவி இழந்தார். நாடாளுமன்ற ஒப்புதலின்றி வரவு செலவுத் திட்டத்தைச் செயல்படுத்த திரு மிஷெல் முயன்றதை அடுத்து அவர் பதவி விலக நேரிட்டது. 1962க்குப் பிறகு அந்நாட்டிலுள்ள ஒரு பிரதமருக்கு இவ்வாறு நடப்பது முதல்முறை.
டிசம்பர் 7: 2019ல் தீச்சம்பவத்தில் பாழாகிப் போன பிரான்சின் உலகப் புகழ்பெற்ற நோட்ர டேம் தேவாலயம், செப்பனிடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
டிசம்பர் 11: 2030 உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளை ஆர்ஜண்டினா, பெராகுவே, உருகுவே ஆகிய நாடுகள் இணைந்து நடத்தப்போவதாக ஃபீபா அறிவித்திருக்கிறது.

