மலேசியாவின் 1எம்டிபி விவகாரம் தொடர்பில் கள்ளப் பணத்தை நல்ல பணம் மாற்றிய குற்றத்திற்காக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் (படம்) மீது குற்றஞ்சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அவர் மீது 20 குற்றச்சாட்டுகள் வரை சுமத்தப்படக்கூடும் என்று அந்நாட்டு 'நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது. மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் திருமதி ரோஸ்மாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 1எம்டிபி யின் முந்தைய கிளை நிறுவனமான 'எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்' தொடர்பில் அந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது. கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய அதே குற்றத்திற்காக திரு நஜிப் மீது கடந்த மாதம் குற்றஞ்சாட்டப்பட்டது. எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் இருந்து அவரது சொந்த வங்கிக் கணக்கிற்கு 42 மில்லியன் ரிங்கிட் (S$14 மில்லியன்) மாற்றிவிடப்பட்டு இருந்தது. இதன் தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த திரு நஜிப், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவ்வாண்டு மே மாதம் நஜிப்பின் பத்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், அவரும் திருமதி ரோஸ்மாவும் மலேசியாவைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.
நஜிப் மனைவி மீது விரைவில் குற்றச்சாட்டு
1 mins read
-

