கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் தமக்கு எதிரான நகை வழக்கை ரத்து செய்யுமாறு கோரியது நேற்று உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்டது. லெபனானிய நகை நிறுவனம் ஒன்று 60 மில்லியன் ரிங்கிட் (S$19.9 மில்லியன்) மதிப்புடைய நகைகளை பிப்ரவரி மாதம் திரு வாட்டி ரோஸ்மாவுக்கு அனுப்பிய பிறகு, அதற்கான பணத்தைத் தராத காரணத்தால் அவருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. அவ்வழக்கை நிராகரிக்க திருவாட்டி ரோஸ்மா கோரியது மறுக்கப்பட்டுள்ளது.
போலிசார் நஜிப்பின் சொத்து களை மே மாதம் சோதனையிட்ட போது நகை நிறுவனத்திற்குரிய 44 நகைகளும் கைப்பற்றப்பட்ட பொருட்களில் அடங்கின. இதற்கிடையில் தொடுக்கப் பட்ட வழக்குப்படி அந்நகைகள் போலிசாரிடம் உள்ளனவா என்பதை அரசாங்கம் நிர்ணயித்து வாக்கு மூலம் பெற நீதிமன்றத்தில் ஆணையிடப்பட்டது. இவ்வழக்கு அடுத்தாண்டு மார்ச் 4, 5 தேதி களில் விசாரணைக்கு வரும் என்று தேதி குறிக்கப்பட்டாலும் நகைகளின் இருப்பிடத்தைப் பற்றி அரசாங்கம் வாக்குமூலம் அளித்தபின் திருவாட்டி ரோஸ்மா மீண்டும் வழக்கை நிராகரிக்க விண்ணப்பிக்கலாம் என்று நீதிபதி திருவாட்டி வோங் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட நகைகளில் 925,000 அமெரிக்க டாலர் (S$1.3 மில்லியன்) மதிப்புள்ள வைர மோதிரம், 670,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள இரு வைரச் சங்கிலிகள், தோடுகள், 586,000 அமெரிக்க டாலர் மதிப்புடைய மற்றொரு வைரச் சங்கிலி, தோடுகள் ஆகியனவும் அடங் குவதாக கூறப்பட்டது. திருவாட்டி ரோஸ்மா, நிறுவனத் தின் நீண்டகால வாடிக்கையாளர் என்றும் அவரின் தேவைக்கு ஏற்ப நகைகளை நிறுவனம் அனுப்பி வருகிறது என்றும் 'தி ஸ்டார்' பத்திரிகை தெரிவித்தது.

