டெல்லஹெசி: அமெரிக்காவின் புளோரிடா நகரை நேற்று முன்தினம் உலுக்கிய சூறாவளியில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. வீடுகளிலும் தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, மரங்கள் வேரோடு சாய்ந்து மின்சாரத் துண்டிப்பும் ஏற்பட்டதாக புளோரிடா அதிகாரிகள் கூறினர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தொடர்ந்து வீசிய சூறாவளி குறித்து சுமார் 50,000 குடியிருப் பாளர்களுக்கு வீடுகளை விட்டு வெளியேறும்படி செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும் அதைப் பலர் பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றி வரும் வேளையில், மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. புளோரிடா, அலபாமா, ஜியோஜியா, நார்த் கெரோலினா ஆகிய இடங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. புளோரிடாவின் பள்ளிகளும் மாநில அலுவலகங் களும் இவ்வாரம் இறுதிவரை மூடப்பட்டிருக்கும். புளோரிடா, ஜியோஜியா அடுத்து சூறாவளி நார்த் கெரோலினாவைத் தாக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. (படத்தில்) பனாமா நகர கடற்கரையில் உள்ள 'மெக்டோனல்ட்ஸ்' உணவகத்தின் பெயர்ப் பலகை ஒன்று மைக்கல் சூறாவளியின் பிடியில் சிக்கிச் சேதமடைந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

