கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்த இந்திய மாணவியைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபின் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்த 21 வயது பூனம்தீப் கோர், கனடாவிற்கு ஓர் ஆண்டிற்கு முன்னர் படிக்கச் சென்றார்.
பூனம்தீப் அவரது நண்பர்களுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றதாகவும் அப்போது அவர் தவறி நீர்வீழ்ச்சிக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து கனடா அதிகாரிகள் மூலம் வெள்ளிக்கிழமை அன்று பூனம்தீப் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினர் கனடா சென்றனர்.
பூனம்தீப் எப்போது நீர்வீழ்ச்சிக்குள் விழுந்தார் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பூனம்தீப் உடல் இன்னும் கிடைக்கவில்லை, உடல் கிடைத்துவிட்டது என்று பரவும் போலியான தகவல்களை நம்பவேண்டாம் என்று மாணவியின் குடும்பத்தினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கனடாவுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் படிக்க செல்வது வழக்கம். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.