சமூக அளவில் 13 பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (ஜூன் 23 ஆம் தேதி) புதிதாக 22 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் தொற்று உறுதியான அந்த 13 பேரில் 10 பேர், முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள். எஞ்சிய மூவருக்கு முந்தைய கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்பில்லை.
முன்னதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையோரில் 8 பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
எஞ்சிய இருவருக்கு கண்காணிப்பு பரிசோதனை மூலம் தொற்று உறுதியானது.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒன்பது பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு அல்லது தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவர்களில் நால்வர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் எவருக்கும் புதிதாக கிருமித்தொற்று பாதிப்பு இல்லை.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,470 ஆக உள்ளது.

