சிங்கப்பூரில் இன்று (ஜூன் 24ஆம் தேதி) புதிதாக 23 பேருக்கு கொவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 62,493 ஆனது.
அவற்றில் 14 சமூகத் தொற்று என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அந்த 14 பேரில் இருவர் ஏற்கெனவே கிருமி தொற்றியோருடன் தொடர்பில்லாதவர்கள் என்று இப்போது வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்பிலிருந்த கொரோனா தொற்றிய 12 பேரில் 11 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
தொற்று உறுதியானோரில் எஞ்சிய ஒன்பது பேரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்களில் நால்வர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் புதிதாக எவரையும் கொரோனா தொற்றவில்லை.
முன்னதாக, தொடர்பின்றி கிருமி தொற்றியதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட மூவரில் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத் தாதியும் ஒருவர்.
சளி, தொண்டை எரிச்சல் ஆகிய அறிகுறிகளைத் தொடர்ந்து பொது மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற அவர், ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனையும் (ஏஆர்டி) பிசிஆர் பரிசோதனையும் செய்துகொண்டார்.
அவ்விரு பரிசோதனை முடிவுகளும் அவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை உறுதிப்படுத்தின.
அவர் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதியே இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.
முன்னர் கொரோனா தொற்றியோருடன் தொடர்பிலிருந்தோர் பத்துப் பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாக நேற்று அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் இதுவரை 35 பேரும் கிருமி தொற்றியபோது வேறு உடல்நலப் பிரச்சினைகளால் 15 பேரும் மாண்டுவிட்டனர்.

