குவாந்தான்: மலேசியாவின் பாகாங் மாநிலத்தில் தொலைத்தொடர்பு கட்டமைப்புச் சாதனங்கள் சேதப்படுத்தப்படும் மற்றும் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாகப் பதிவாகி வருகின்றன.
அதுபோன்ற சம்பவங்களால் கடந்த ஆண்டில் மட்டும் தொலைத் தொடர்பு கட்டமைப்பு நிறுவனங்கள் 3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தகவல்தொடர்புக் கருவிகள் திருடப்படுவதால் தொலைத்தொடர்புச் சேவைகளில் தடங்கல்கள் ஏற்பட்டு, பயனீட்டாளரின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக மாநில தகவல்தொடர்பு, ஊடகம், இளைஞர், விளையாட்டு மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் குழுவின் தலைவர் ஃபட்ஸ்லி கமால் தெரிவித்தார்.
கம்பிவடம், மின்கலன், தகவல்தொடர்பு உபகரண அட்டைகள், டீசல், ‘ரிமோட் ரேடியோ’ அமைப்புகள் ஆகியவை திருடப்பட்ட பொருள்களில் அடங்கும் என்று அவர் கூறினார்.
தொலைத்தொடர்புக் கட்டமைப்பைச் சேதப்படுத்துவதையும் திருட்டையும் தடுக்க மாநில அளவிலான பிரசாரத்தைத் தொடங்கி வைத்த பிறகு திரு ஃபட்ஸ்லி செய்தியாளர்களிடம் பேசினார்.
“சேதப்படுத்துதல் மற்றும் திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த காவல்துறையுடன் இணைந்து மலேசியத் தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் செயல்பட்டு வருகிறது,” என்றார் அவர்.
இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்க, தொலைத்தொடர்பு கோபுர வட்டாரங்களில் உள்ள பாதுகாப்புக் கதவுகள் எப்போதும் பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்து, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களின் பொறுப்பை நிறைவேற்றுமாறும் அவர் வலியுறுத்தினார்.


