கெய்ரோ: எகிப்து நாட்டில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் குறைந்தது 32 பேர் இறந்துவிட்டதாகவும் 63 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கெய்ரோ-அலெக்சாண்டிரியா நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்தும் பல கார்களும் மோதிக்கொண்டதாகக் கூறப்பட்டது.
அவ்விபத்தில் சிக்கிய கார் ஒன்றிலிருந்து எரிபொருள் கசிந்து தீப்பற்றி, அது மற்ற வாகனங்களுக்கும் பரவியதாக அரசாங்கத்தின் அல் அஹ்ரம் ஊடகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. விபத்தில் சிக்கிய வாகனங்கள் பற்றி எரிவதும் பேருயரத்திற்குக் கரும்புகை வெளியாவதையும் அக்காணொளிகள் காட்டுகின்றன.
மோசமான வானிலையும் சாலையில் தேங்கியிருந்த நீரும் விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் கூறுகின்றன.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 20 அவசர மருத்துவ வாகனங்கள் நிகழ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
விபத்து தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.