பெட்டாலிங் ஜெயா: கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் வழியாக இடம்பெற்ற கடத்தல் நடவடிக்கைகள் மூலம் மலேசிய அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் ரிங்கிட் (S$571 மில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 29) தெரிவித்தார்.
இதன் தொடர்பில் இம்மாதம் 11 முதல் 25ஆம் தேதிக்குள் சுங்கத்துறை அதிகாரிகள் 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக திரு அஸாம் கூறினார்.
அவர்கள் 4.7 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை லஞ்சமாகப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
செப்பாங்கிலுள்ள அந்தச் சரக்கு முனையம் வழியாக புகையிலை, சிகரெட், மதுபானம், சுகாதாரப் பொருள்கள், வாகன உதிரிப் பாகங்கள் ஆகியவற்றைக் கடத்தியதில் அக்கும்பலுக்குத் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சோதனை செய்யாமல், வரி செலுத்த வேண்டிய பொருள்களை நாட்டிற்குள் அனுமதிக்க அந்தக் கடத்தல் கும்பல், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது என்று திரு அஸாம் கூறினார்.
இதன் தொடர்பில் வேறு 27 பேரும் நிறுவன உரிமையாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அத்துடன், 231 வங்கிக் கணக்குகளையும் ஊழல் தடுப்பு ஆணையம் முடக்கிவைத்துள்ளதாகத் திரு அஸாம் குறிப்பிட்டார். அக்கணக்குகளில் 17 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதைத் தடுக்கும் பிரிவு, உள்நாட்டு வருவாய் வாரியம், மலேசிய தேசிய வங்கி ஆகியவை இணைந்து மேற்கொண்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையின்மூலம் அந்தச் சந்தேகப் பேர்வழிகள் பிடிபட்டனர்.
பல வீடுகள், சொகுசுக் கார்கள், கைப்பேசிகள், கணினிகள், மடிக்கணினிகள், ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், இணையவழிச் சூதாட்டம், நாணய மாற்று, கடன் வழங்குதல், பாலியல் தொழில் ஆகியவற்றிலும் அக்கும்பல் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் திரு ஆஸாம் தெரிவித்தார்.
அதிகாரிகளைக் குழப்ப பல்வேறு தொழில்துறைகளின்கீழ் 19 போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.