கொழும்பு: இலங்கை காவல்துறையினர் 37 சீனக் குடிமக்களைக் கைது செய்துள்ளனர். அவர்கள் தலைநகர் கொழும்பில் மோசடி நிலையம் ஒன்றை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கைது நடவடிக்கைத் தொடர்பாக இலங்கை காவல்துறை பேச்சாளர் ஞாயிற்றுக்கிழமை (மே 3) அறிக்கை வெளியிட்டார். “37 பேரும் சுற்றுலா விசா மூலம் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள் சட்டவிரோதமாக வேலை செய்யத் தொடங்கியுள்ளனர்,” என்று அதிகாரிகள் கூறினர்.
35 கைக்கணினிகள், 147 கைப்பேசிகள், 100 சிம் அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களின் வயது 23க்கும் 44க்கும் இடைப்பட்டது. அவர்களில் ஒரு பெண்ணும் உள்ளார். காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவல் மூலம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இணையம் வழி மோசடிச் செயல்கள் அதிகரித்து வருவதை அடுத்து இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

