கைபர் பக்துன்க்வா: பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் நடந்துவரும் ராணுவ நடவடிக்கையில் கடந்த 10 நாள்களில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) வெளியிட்ட அறிக்கையில், கைபரின் தீரா பகுதியில் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் பாதுகாப்புப் படைகள் விரிவான உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளை நடத்தி வருவதாகக் கூறியது.
கடந்த இரண்டு நாள்களில் நடத்தப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகளின் விவரங்களில், பயங்கரவாதிகளின் இருப்பிடங்களைக் கண்டறிந்து 12 பயங்கரவாதிகளைக் கொன்றதாகத் தெரிவித்தனர். மொத்தம் இதுவரை 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் நடவடிக்கைகள் பயங்கரவாத குழுக்கள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
ஐஎஸ்பிஆர் ஊடகப் பிரிவின் கூற்றுப்படி, இப்பகுதியில் அமைதி திரும்பும் வரை தொடர்ந்து பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள் என்று பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.