மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்பின் மனைவி ரோஸ்மாவுக்குத் தொடர்புள்ள ஆடம்பர கைப்பைகள் ஏலம்

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்பின் மனைவி ரோஸ்மாவுக்குத் தொடர்புள்ள ஆடம்பர கைப்பைகள் ஏலம்

09 Jun 2023 - 7:38 pm

2 mins read

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு தொடர்புள்ள நாற்பது விலை உயர்ந்த கைப்பைகள் ஏலம் விடப்படும் என்று மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவற்றின் மதிப்பு பல ஆயிரம் ரிங்கிட் என்று சொல்லப்படுகிறது.

1எம்டிபி நிதி முறைகேடு தொடர்பில் 2018ல் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெவிலியன் ரெசிடென்சஸ் வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது பெட்டி பெட்டியாக விலையுயர்ந்த ஆடம்பர கைப்பைகள் கைப்பற்றப்பட்டன. ஏறக்குறைய நாற்பது பெட்டிகள் நிறைய கைப்பற்றப்பட்ட கைப் பைகளின் மதிப்பு பல ஆயிரக்கணக்கான ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அவற்றில் 40 ஆடம்பர கைப்பைகளை ஏலம் விடுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விவரத்தை வெளியிட்ட மலேசிய சட்ட அமைச்சர் அஸாலினா உதுமான், நாற்பது விலையுயர்ந்த ஆடம்பர கைப்பைகள் உட்பட காவல்துறையும் ஊழல் தடுப்புப் பிரிவும் கைப்பற்றிய பொருள்களை அரசாங்கம் கை யகப்படுத்தியிருக்கிறது என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அவர் எழுத்துபூர்வமாக அவ்வாறு பதிலளித்திருந்தார்.

1எம்டிபி நிதி முறைகேடு வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருள்களின் மதிப்பு குறித்து லிம் கேள்வி கேட்டார்.

"நிதி அமைச்சின் கீழ் சிறப்புக் கணக்கில் முதலீடு செய்யப்பட்ட 66.96 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தை காவல்துறை பறிமுதல் செய்தது. ஊழல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றிய 16.06 மில்லியன் ரிங்கிட் அரசாங்க வருவாய் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது," என்று அஸாலினா விளக்கமளித்தார்.

நாற்பது கைப்பைகள் எப்போது ஏலம் விடப்படும் என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
மலேசியாநஜிப் ரசாக்ஊழல்ஏலம்